புதன், 31 டிசம்பர், 2014

எந்நிலை வரினும்

                      இந்த ஆண்டின் இவ்விறுதிப்  பதிவைப் பதிவதில் எனக்குப்  பெரும்மகிழ்வே.மீதமிருக்கும் இச்சில மணி நேரங்களை இந்தாண்டில் நடந்த நிகழ்வுகளை மீண்டும் அசைபோட யத்தனிக்கிறேன்.சூதும்,வஞ்சகமும், சுயநலமும் மிக்க சமுதாயத்தில் ஒருவன் நேர்மையாளனாய் வாழ்ந்துவிடுதல் கடினமே.எதார்த்தவாதிக்கு அந்த எதார்த்தமே எதிரி என்பதை ஆண்டு முழுதும் நொடிக்கு நொடி நான் உணர்ந்த வருடமிது.எண்ணித்துணிக கருமமென துணிந்தேதான் எதிர்கொண்டேன் அத்துணையையும்.

                       ஆண்டின் தொடக்கத்தில் முடங்கிய தொழில் இன்றும் எழவிடாமல் தடுக்கும் பொருளாதாரம் ஒருபுறம். உற்பத்திக்கு மூலப்பொருட்கள் கடனுக்கு வழங்கிய நிறுவனத்தாரின் தொடர் அழைப்புக்கள். நட்பு ரீதியில் உதவிய உள்ளங்களின் முகங்களைச் சந்திக்க முடியாத நிலைமை இவற்றையெல்லாம் தாண்டி என் நிலையைப் புரிந்துகொள்ளாது நிலைகுலைய வைத்த குடும்ப உறவுகள்... எனத்  தொடர்ந்து நீளும் பட்டியல். இது ஏன்?  எதனால் இந்த நிலைமை...?

தள்ளாத வயதில் மற்றவர் கரங்களை எதிர்நோக்கும் நிலைமை, துள்ளித்திரியும் என் வயதில் எனக்கு  நேர்ந்ததுதான் காரணம்.

                             வெறும் வாக்குறுதிகளாலேயே எனக்கு நம்பிக்கைகளின் கண்ணியை இணைத்து  இவ்வருட இறுதிவரை நாட்களைச் சங்கிலித் தொடரென இன்னும் இழுத்துக்கொண்டு இருப்பவர் ஒருபுறம் 
                              சுயமுடிவு எடுக்கத்  தாமதித்து  சூழலுக்குள் சிக்கித் தவித்த மற்றொருவர் 

                              இவர்களிருவரையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு கர்ண கொடூர  கையறு நிலையில் நான்.
                                நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. 
                        
               அகங்காரத்தில் வார்த்தைச் சவுக்கு சொடுக்கி என் அகங்காயப்படுத்திய பலர்.எங்கே உதவி கேட்டுவிடுவானோ? என விலகி நின்று தற்காத்துக் கொண்டோர்  பலர். அனைவரும் ஒன்றைக் கட்டாயப் பயிற்றுவித்தலில் உணர வைத்தனர், அது பொருளில்லாருக்கு எவ்வுலகமும் இல்லை என்பதுதான்.எதையும் எதிர்கொண்டு சாதிக்கும் துணிவும்,விவேகமும் இருக்கும்பொழுது ஒருவன் அவ்வளவு எளிதில் உடைந்தா போய் விடுவான். காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கையில், கூடியிருந்த அனைவரையும் மகிழ்வித்துப் பார்த்தவன் நான்.ஆனால் இன்று பகிர்ந்துகொள்ள ஆளற்று, என் உள்ளத்தையே உற்ற தோழனாக்கி, சந்தித்த சோதனைகளைச் சாதனைகளாக்க உள்ளத்திற்கு  உரமேற்றியுள்ளேன். இவ்வன்கொடுங்காலத்தில்  முக நூல் நட்புகள் என் சிந்தனை சிதறா வண்ணம் அவர்களின் பதிவுகளால் என்னை ஆற்றுப் படுத்தியதுண்டு.அதை நினைவுகூரும் விதமே இந்தப் பதிவு.அதோடு இது தனிப்பட்ட என் நிலைமையைக் கூறி உங்களிடம் பச்சாதாபம் பெறக்கூடியதல்ல.சிறு பகிர்தலெனக் கொள்ள பணிக்கிறேன் உங்களை அன்பால்.

                   உங்களைப் பொறுத்த வரை இது முடியப்  போகும் ஆண்டு,ஆனால் எனக்கோ என்னை முழுமை அடைய  வைத்த ஆண்டு.

                   கொண்டாட்டங்களைத் தவிர்க்கும் இயல்புடையது என் மனது. அவ்வகையில் இந்த ஏகாதிபத்திய திணிப்புக் கொண்டாட்டங்களை அறவே வெறுத்து ஒதுக்கினாலும், எண்களால் மாற்றம் பெரும் ஆண்டுக்காய் வாழ்த்தித்தான் ஆகவேண்டும். 
கடக்கப் போவதைக் கிடப்பில் போட்டு வருவதை நெஞ்சுரத்தோடு எதிர்கொள்ளுங்கள். எந்நிலை வரினும் நிலை குலையாது நிமிர்ந்து நில்லுங்கள் வாழ்வு வசப்படும்.

இதோ..
புட்டத்திலொட்டிய மண்ணைத் தட்டிஎழுந்து நிற்கும் சிறுவனெனத் தயாராகிவிட்டேன்   நான்  வரும் ஆண்டை ஆண்டு அனுபவிக்க...

அனைவருக்கும் ஆண்டு மாறும் தின நல்வாழ்த்துக்கள்.

               

                                   

                            

1 கருத்து:

  1. ” கனவு மெய்ப்பட வேண்டும் .....”
    மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் . – சுப்ரா .

    பதிலளிநீக்கு