கடந்த வாரம் சென்னை புத்தகக் கண்காட்சியில் நந்தன் அண்ணாவைப் பார்த்துப் பேசிவிட்டு வந்தது முதல்,அண்ணனின் "தாழி" சிறுகதைத் தொகுப்பினைப் பற்றி நாம் எதுவும் எழுதவில்லையே,அண்ணன் ஏதேனும் நினைத்துக் கொள்வாரோ என்றெண்ணினேன். நேரம் கிடைக்கவில்லை என்று கூறுமளவு பருப்பல்ல நான். இன்னும் என் பின்முதுகைத் தொற்றித் தொடரும் பொருளாதாரச் சுணக்கந்தான் உண்மை காரணம். என் அப்பனின் பெயர் பொறிக்கப்பட்ட அரிசியைத் தான் இன்னும் நான் உட்கொள்கிறேன் . இதை வெளிப்படையாகக் கூறியிருந்தாலும் தான் செய்யும் எந்தச் செயலுக்கும் நியாயம் கற்பிக்கும் சராசரி மனிதனைப் போன்றவொரு தோற்றம் எனக்குள் வந்து செல்வதை மறுக்க இயலவில்லை.பேராளுமைகளே தாழி பற்றி எழுதத் துவங்காத சூழலில் நான் எழுதுவதை அதிகப்பிரசங்கித்தனமாகவே நினைத்திருந்தேன். ஆனால் புத்தகம் வெளிவந்து ஒரு மாதத்தை நெருங்க விருக்கும் இத்தருணத்தில் எழுத யத்தனித்ததை சரியெனக் கொள்கிறது என் உள்மனம்.
" தாழி"
நந்தன் அண்ணா எனக்கு முகநூலில் 2013 டிசம்பர் மாதம் முதல் அறிமுகம். அதே மாதத்தில் ஐந்தாம் தேதி அவரிட்ட நிலைத்தகவலில் இருந்து அவரின் நட்பு வட்டத்திற்குள் இணைந்தேன்.அவரின் எழுத்துக்களை வாசிக்கையில் எனக்கு கடந்து சென்ற என் பால்யத்தின் நினைவுகளை மீட்டுத் தந்தது போலப் பட்டது.அன்று தொட்டு இன்றுவரை அவரின் கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் அனைத்தையும் வாசித்து விடுவேன். அந்த வரிசையில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்புத்தான் இந்த "தாழி".
தொகுப்பில் உள்ள நிறைய சிறுகதைகள் இணைய,மாத இதழ்களில் வெளியானவை.அவைகள் வெளியான அன்றே அனைத்தையும் படித்து விட்டு வாலண்டியராய்க் கருத்தைப் பதிவு செய்து விடுவேன்.இத்தொகுப்பில் உள்ள 'தேய்ந்த நிலாக்களின் காலம்" கதைகுறித்து நான் வசிக்கும் கோவையைச் சார்ந்த இன்னொரு முகநூல் நபரோடு அண்ணனுக்கு மிகப் பெரிய கருத்து வாதம் நடந்தது இன்னும் என் நினைவில் உள்ளது.
'ஒரு முகம்,ஒரு பெயர் மற்றும் செல்வி என்றொரு சிநேகிதி.." யில் வரும் ஐக்கோடாய் நீங்கள் இருந்திருப்பீர்களோ? என்று நானறியேன்,ஒருவன் இருப்பினும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு திராவிடச் செல்வி ஐயமின்றி வந்து சென்றிருப்பாள்.
"செல்லக்கிளியின் தம்பி" அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு கதை .இதுபோன்ற கதையைக் கையில் எடுக்க ஒரு துணிச்சல் வேண்டும். பெயரளவுக்கு சமத்துவம் பேசிக்கொண்டு, புறவாசலில் கவுரவத்திற்காக கொலைகள் செய்துகொண்டிருக்கும் பலரின் முகமூடியைக் இக்கதை கிழித்தெறிகிறது.
"இந்திரனின் கண்கள்" " மேலே இருந்து கொட்டும் சொற்கள்" மற்றும் "ஒரு ஒருதலைக் காதல் கதை" ஆகிய கதைகளைப் படிக்கையில் இது படைப்பாளரின் அனுபவமோ என்றெண்ண வைக்கிறது.அதுவும் முதல் கதையில் மூழ்கத் துவங்குகையில், இவுரு எப்படா நம்மள நோட்டம் விட்டாரு? என்ற சந்தேகத்தையும் விதைத்து விடுகிறது. உங்கள் அலமாரியை அலங்கரிக்க அர்த்தமுள்ள ஒரு சிறுகதைத் தொகுப்பு என்பதோடு, இவரின் எழுத்து நடை வளரும் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடிய ஒன்று என்பதும் என் கருத்து.
இப்படியே நல்ல விசயங்களை மட்டும் சுட்டிக் காட்டி விட்டால் போதுமா? அது சரியா?.குறைகளைச் சுட்டிக் காட்டினால் தானே வாசிப்பாளன் என்பதன் அர்த்தம் நிறைவேறும். அதனடிப்படையில் பார்த்தால் பெரும்பாலான கதைகள் சிறிய பட்ஜெட் படம்போல பயணக் குறிப்புகளைத் தாங்கியோ, அல்லது ஒரு குடியிருப்புக்குள் அடங்கியோ சென்னையைச் சுற்றியே கதைக்களம் அமைந்து விடுகிறது. இது வாசிப்பாளனைச் சோர்வுறச் செய்கிறது.அதே போல இவரின் பார்வையில் இருந்தே கதாபாத்திரங்களைப் பார்க்கச் செய்து விடுவதால், சில கேரக்டர்கள் மனதுக்கு ஒட்டாமலே பயணிக்கின்றன. எழுத்து வடிவங்களை இன்னும் மேம்படுத்தி இருக்கலாம்.பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.
மற்றபடி , மொத்தத் தொகுப்பையும் ஒரே மூச்சில் படித்து முடித்தபின்தான் கீழே வைப்பீர்கள் என்பதற்கு நான் உத்தரவாதம்.
அப்புறம் என்ன? என்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்தப் பதிவின் தலைப்பை மீண்டும் படித்து விடுங்கள்.